ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கோலி, ரோஹித்தை கட்டம்கட்ட கம்பீர் முடிவு எனக் கூறப்படுகிறது.
இந்திய அணி, சமீப காலமாகவே குறைந்த அளவில்தான் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
கடைசியாக, இந்தாண்டு துவக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் விளையாடியப் பிறகு, தற்போது அக்டோபர் 19ஆம் தேதி முதல், ஆஸ்திரேலிய மண்ணில் துவங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.
இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இத்தொடரில், புது பேட்டிங் வரிசை களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்த மாற்றம் இருக்காதாம். முதல் இரண்டு போட்டிகளில், வழக்கம்போல ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டி இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.
இதில், ரோஹித் சர்மா தனது திறமையை நிரூபித்தாலும் நிரூக்கவில்லை என்றாலும் கடைசிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கபட மாட்டாது. ஆஸ்திரேலிய மண்ணில் நல்ல அனுபவத்தை இளம் வீரர்கள் பெற வேண்டும் என்பதற்காக, கடைசி போட்டியில், ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை ஓபனராக ஆட வைப்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான், பேக்கப் ஓபனராக ஜெய்ஷ்வாலை சேர்த்திருக்கிறார்களாம்.
அதேபோல், விராட் கோலி இடத்திற்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடைசிப் போட்டியில், ஓபனர்களாக ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஓபனர்களாகவும், அடுத்து கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ஆகியோரை ஆட வைத்துவிட்டு, 5ஆவது இடத்தில் இருந்தே ஆல்-ரவுண்டர்களை ஆட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது, சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரையும் ஆட வைக்க திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணியில், கே.எல்.ராகுல் ஓபனராக இருக்கும் நிலையில், ஒருநாள் அணியில் மிடில் வரிசையில் ஆடுவதால், அவரது பேட்டிங் நுட்பத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கருதுவதால்தான், சோதனை அடிப்படையில் கே.எல்.ராகுலை மூன்றாவது இடத்தில் ஆட வைக்க முடிவு செய்துள்ளாராம்.
ஒருவேளை, மூன்றாவது போட்டியில், இந்த புது பேட்டிங் வரிசை சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அடுத்து உள்நாட்டில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், கடைசி போட்டியில் புது பேட்டிங் வரிசையை ஆட வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
